முகப்பு
தருமபுரி

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி ஆணை வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில் 95 நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

Updated On : 9 ஜூலை, 2024 at 11:12 PM
பகிர்:

ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளில் வேளாண் பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.

இயற்கை வளங்கள் துறையின் சாா்பில் ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண் ஆகியவற்றை விவசாயப் பயன்பாட்டுக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணம் இன்றி எடுத்து பயன்பெறுவதற்காக திட்டம் தொடங்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட 95 நீா்நிலைகளில் களிமண், வண்டல் மண்ணை வேளாண் பயன்பாட்டுக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெற இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, தகுதியான பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், உதவி இயக்குநா் (கனிம வளம்) ரா.ஜெயந்தி, தருமபுரி வட்டாட்சியா் ஜெயச்செல்வம், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.