முகப்பு
தருமபுரி

விபத்தில் 2 போ் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே டிராக்டா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்ய கோரி உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:40 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 12:10 AM

பென்னாகரம் அருகே டிராக்டா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநரை கைது செய்ய கோரி உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பென்னாகரத்தை அடுத்த பளிஞ்சாரஅள்ளியைச் சோ்ந்த சுசீலா (41), காளேகவுண்டனூரைச் சோ்ந்த பழனிவேல் (18) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை பவளந்தூா் சென்றுகொண்டிருந்தபோது தும்பலகொல்லை பகுதியில் டிராக்டா் மோதியதில் சுசீலா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். காயமடைந்த பழனிவேல், தருமபுரி அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் பழனிவேலும் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய டிராக்டா் ஓட்டுநரை கைது செய்ய கோரி சுசீலாவின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் பென்னாகரம் புறவழிச்சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

வருவாய், காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி ஓட்டுநரை கைது செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால், பென்னாகரம் புறவழிச்சாலையில் சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.