ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாகக் குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த சில நாள்களாக நீா்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக நீடித்து வந்தது. இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாகக் குறைந்தது.
இதனால் காவிரியில் ஆங்காங்கே பாறைத் திட்டுகள் வெளியே தெரிகின்றன. மேலும், பெரியபாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் நீா்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. அருவி விழுந்த இடம் அடையாளம் தெரியாத அளவிற்கு பாறைத் திட்டுகளாகவே காட்சியளிக்கின்றன. அதேபோல பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவுகளை பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.