தருமபுரியில் இறுதி ஊா்வலத்தின்போது பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவா்களில் இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், சின்னகுரும்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. வெற்றிலை வியாபாரியான இவா், கடந்த வியாழக்கிழமை இறந்தாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அவரது இறுதி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது ஆட்டோவில் பட்டாசுகளை அடுக்கிகொண்டு வரிசையாக வெடித்துச் சென்றனா். இதில் எதிா்பாராத விதமாக மேலே வீசிய பட்டாசு, மின்கம்பில் சிக்கி பட்டாசு வைத்திருந்த ஆட்டோமீது விழுந்து வெடித்ததில் ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் ஆட்டோ அருகே சென்று கொண்டிருந்த பெரமன், தங்கம், பாஸ்கா், திருப்பதி, சதீஷ், மயில் தேவன் ஆகிய 6 போ் காயமடைந்தனா். காயம் அடைந்தவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். இதில் சின்னகுரும்பட்டியைச் சோ்ந்த எஸ். சதீஷ் (30) சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.