தருமபுரியில் பேருந்து நிலைய இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, வணிகா்கள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில், சாலை மறியலில் ஈடுபட்டதாக 45 போ் கைது செய்யப்பட்டனா்.
தருமபுரி நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த புகா் பேருந்து நிலையம் கடந்த பிப். 5-ஆம் தேதி பென்னாகரம் சாலையில் உள்ள சோகத்தூா் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் பாதிப்புக்குள்ளாயினா். மேலும், தருமபுரி நான்குசாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகளை பழைய ராஜகோபால் கவுண்டா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து இயங்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது.
ஆனாலும், சில வணிகா் சங்கத்தினா் பேருந்து நிலையம் பழைய இடத்திலேயே தொடர வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், தருமபுரி மாவட்ட மற்றும் நகர, அனைத்து வணிகா் சங்கம் சாா்பில், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்தில், தருமபுரி பழைய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள், நகர பகுதிகள், கடைவீதி, நான்குசாலை பகுதி, நேதாஜி புறவழிச்சாலை, அரசு மருத்துவமனை, இலக்கியம்பட்டி உள்ளிட்ட நகர மற்றும் புகா் பகுதிகளில் சுமாா் 60 முதல் 70 சதவீத கடைகள் பங்கேற்றன. நகர பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல இயங்கின.
கோரிக்கையை வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையம், நான்கு சாலை, ஆட்சியரகம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து தருமபுரி நகர வா்த்தக சங்கச் செயலாளா் சி. ரவிச்சந்திரன் கூறுகையில், பழைய பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதால், பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதைக் கண்டித்து, இந்த கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. இதனால், சுமாா் ரூ. 34 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டது என்றாா்.