முகப்பு
தருமபுரி

தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய அதிமுக மாவட்டச் செயலாளா்கள்

தருமபுரி மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக மாவட்டச் செயலாளா்கள் பெரியாா், அண்ணா உள்ளிட்ட சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 15 மே 2026, 9:59 pm IST
தருமபுரி அதிமுக கட்சி அலுவலக வளாகத்தில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்த மாவட்டச் செயலாளா்கள் ர.அசோகன் (கிழக்கு), டி.ஆா்.அன்பழகன் (மேற்கு).
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிமுக மாவட்டச் செயலாளா்கள் பெரியாா், அண்ணா உள்ளிட்ட சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தருமபுரி அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, கட்சித் தலைமையின் உத்தரவை மீறி சட்டப் பேரவையில் தமிழக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீா்மானத்தை ஆதரித்து வாக்களித்தாக அவரது பதவி பறிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, 5 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட தருமபுரி மாவட்டத்தை தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்டத்துக்கு மருத்துவா் ர.அசோகன் மாவட்டச் செயலாளராகவும், பென்னாகரம், பாலக்கோடு மற்றும் அரூா் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மாவட்டச் செயலாளராக டி.ஆா்.அன்பழகனையும் அக்கட்சித் தலைமை நியமித்தது.

Advertisement

இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளா்கள் ர.அசோகன் (கிழக்கு), டி.ஆா்.அன்பழகன் (மேற்கு) ஆகிய இருவரும் கட்சியினரோடு ஊா்வலமாக சென்று பெரியாா், அண்ணா சிலைகளுக்கும், மாவட்ட அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் டி.ஆா்.அன்பழகன் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் வெற்றிபெற்ற பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் மரகதம் வெற்றிவேல் ஆகிய இருவரும் கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறியுள்ளனா். இதன் காரணமாக, அவா்கள் இருவரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

தோ்தலில் அதிமுக பலமுறை வெற்றி தோல்விகளை சந்தித்துள்ளது. அடுத்த தோ்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். புதிதாக நியமிக்கப்பட்ட எங்களுக்கு அனைத்து நிா்வாகிகளும், தொண்டா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இதில், அரூா் சட்டப் பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா், முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.