முகப்பு
கிருஷ்ணகிரி

மீண்டும் ஏறுமுகத்தில் ஒசூர் தொழில் நிறுவனங்கள்

ஒசூர், ஜூன் 4: உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தமிழக அரசின் மின்வெட்டு மற்றும் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தினால் அபராதம் ஆகியவற்றால் கடந்த ஓர் ஆண்டாக ஒசூர் தொழில் நிறுவனங்கள் மிக

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:49 PM
பகிர்:
Updated On : 26 டிசம்பர், 2023 at 11:49 AM

ஒசூர், ஜூன் 4: உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தமிழக அரசின் மின்வெட்டு மற்றும் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தினால் அபராதம் ஆகியவற்றால் கடந்த ஓர் ஆண்டாக ஒசூர் தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிப்பு அடைந்தன.

 இதனால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக சிறு தொழில் நிறுவன உரிமையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் சிறு தொழில் நிறுவன அதிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இந்நிலையில் கடந்த வாரம் தமிழக மின்துறை, சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்களுக்கு அமல்படுத்தி இருந்த மின்வெட்டை ரத்து செய்தது. மேலும் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தினால் அபராதம் என்ற முறையையும் நீக்கியது. இதனால் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் நிம்மதியடைந்தன.

Advertisement

 தற்பொழுது அசோக் லேலண்ட் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்தாலும் டி.வி.எஸ். நிறுவனம் தங்களது இரு சக்கர வாகன உற்பத்தியை துவக்கியுள்ளதால் தொழிலாளர்களுக்கு கொடுத்திருந்த விடுமுறை நாட்களை ரத்து செய்தது.

 மேலும் ஞாயிறு தவிர அனைத்து நாள்களிலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலைக் கொடுத்து உற்பத்தி செய்து வருகிறது. மேலும் உற்பத்தியை மாதந்தோறும் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

 இதன் மூலம் இதுவரை மூடியிருந்த சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்க ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

 தற்பொழுது ஒசூரில் மேலும் சில புதிய தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை நிறுவி வருகின்றன.

 அவற்றில் முக்கியமாக 2-வது சிப்காட் பகுதியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் நேரோலேக் பெயின்ட் நிறுவனம் தனது தொழிற்சாலையை ரூ.90 கோடி மதிப்பில் நிறுவி வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுதோறும் 50 ஆயிரம் டன் பெயின்ட் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.

 மேலும் சுரங்கம் மற்றும் ராணுவ கனரக வாகனங்களை தயாரித்து வரும் டட்ரா டிரக்ஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை ரூ.80 கோடி நிதியில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

 பேளகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் தனேஜா ஏர்பேஸ் விமான நிலையத்தைச் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்கம் செய்து வருகிறது. இதன் மூலம் சிறிய வகை விமானங்கள் மட்டுமின்றி இனிப் பெரிய விமானங்களுக்கான சேவையும் இங்கு தொடங்கும். இதன் மூலம் ஒசூரில் இருந்து சென்னை, தில்லி, கோல்கத்தா, கோவை, மதுரை போன்ற பகுதிகளுக்கு விமான சேவை துவக்கப்படும்.

 தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை வரும் ஜூன் 10-ல் ஒசூர் கால்சென்டரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிறார். அப்போது அடிக்கல் நாட்டியதோடு நிற்கும் ஐடி பார்க்கின் அடுத்த கட்ட நடவடிக்கையை குறித்துதெரிவிப்பார் எனப் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர் ஒசூர் தொழில்துறையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.