போலீஸாரால் தேடப்பட்டவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியில் நடைபெற்ற இரு தரப்பினர் மோதல் விவகாரத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியில் நடைபெற்ற இரு தரப்பினர் மோதல் விவகாரத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.
சாமல்பட்டியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியினர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், சமாஜ்வாதி கட்சி பிரமுகர் அருள் மீதான வன்கொடுமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்; பிரச்னைக்குரிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஜிம்.மோகனை கைது வேண்டும் என மாவட்ட எஸ்.பி. எம்.அசோக்கமாரிடம் சமாஜ்வாதி கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதேபோல, சாமல்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஒரு தரப்பைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சாமல்பட்டி, மேல் சாமல்பட்டி, ஜோகிப்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஜிம் மோகனைக் கைது செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அவரை வெள்ளிக்கிழமை இரவு தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.