சூளகிரி பகுதியில் வாகனங்களில் இருந்து பேட்டரி திருடிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி உத்தனப்பள்ளி சாலையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தியிருந்த ரோடு ரோலரில் இருந்த ரூ.8,000 மதிப்புள்ள பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல், சூளகிரி அருகே உள்ள பெரிய சப்படியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த டிராக்டரில் இருந்த ரூ.12,000 மதிப்புள்ள பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதேபோல் மேலும் சில இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து பேட்டரி திருடுபோனதாக வந்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், சூளகிரி அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (29), சூளகிரி முஸ்லீம் தெருவைச் சேர்ந்த யாசின் (18), மகபூப் (18), உத்தனப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (26) ஆகியோர் வாகனங்களில் தொடர்ந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.