தேன்கனிக்கோட்டை வட்டவடிவுப் பாறையில் முகாமிட்டிருந்த 40 யானைகள் மரக்கட்டா வனப் பகுதிக்கு விரட்டப்பட்டன.
கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதியில் குழுக்களாகப் பிரிந்து வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே பேவநத்தம் வனப்பகுதியில் வட்டவடிவுப் பாறையில் 55 யானைகள் முகாமிட்டிருந்தன. இவை பேவநத்தம், பாலேகுளி, காடுலக்கசந்திரம், மேகலகவுண்டனூர், திம்மசந்திரம், லட்சுமிபுரம், கிரிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ராகி, தக்காளி, கொள்ளு, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் ஆறுகம் தலைமையிலான வனத் துறையினர் வட்டவடிவுபாறையில் முகாமிட்டிருந்த யானைகளை விரட்டினர். இதில் 40 யானைகள் தனியாகப் பிரிந்து மரக்கட்டா வனப் பகுதிக்குள் சென்றன. 15 யானைகள் வட்டவடிவுப்பாறை அருகே தனியாக பிரிந்தன.