கத்திரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கத்திரிக்காய் சாகுபடிசெய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் கத்திரிக்காய் போளூர், ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கத்திரிக்காய் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது விலை மிகவும் வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ ரூ.4 முதல் ரூ.5 வரை மட்டுமே விற்பனையாகிறது.
விலை வீழ்ச்சியால், கத்திரிக்காய் அறுவடை செய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு கூலி கொடுப்பதற்கு கூட பணம் வராததால் கத்திரிக்காயை ஏற்றுமதி செய்யாமல் சாலையோரம் கொட்டியுள்ளனர். மேலும், கத்திரிக்காய் அறுவடையை நிறுத்திவிட்டு, நிலத்தில் மாடு மேய்த்து வருகின்றனர். இதனால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகள், வேளாண்துறை சார்பில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்கவும், நிவாரணம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.