திரையரங்கு உரிமையாளர் உள்பட இருவர் கைது
கிருஷ்ணகிரியில் புதிய திரைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த திரையரங்கு உரிமையாளர் உள்பட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் புதிய திரைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்த திரையரங்கு உரிமையாளர் உள்பட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்தவர் முருகன்(51). இவருக்குச் சொந்தமாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக சாலையில் திரையரங்கு உள்ளது. அந்தத் திரையரங்கில் கடந்த 16-ஆம் தேதி வெளியான "மனுசனா நீ' என்ற திரைப்படத்தை திரையிட்டார்.
அப்போது அந்தத் திரைப்படத்தை அவரே திருட்டு வீடியோ எடுத்து சட்ட விரோதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த படத்தின் தயாரிப்பாளர் வேலூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார் கிருஷ்ணகிரிக்கு வந்து முருகனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சட்ட விரோதமாக அவர், புதிய திரைப்படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, முருகன், திரையரங்கு ஆபரேட்டர் துரை (50) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்கள் பதிவேற்றம் செய்யப் பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.