மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை
போச்சம்பள்ளி அருகே மது அருந்த பணம் தர மறுத்த மனைவியைக் கொன்ற கணவனுக்கு, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
போச்சம்பள்ளி அருகே மது அருந்த பணம் தர மறுத்த மனைவியைக் கொன்ற கணவனுக்கு, கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி பெருமாள்(65). இவரது மனைவி முருகம்மாள்(55). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான பெருமாள், தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இதனால், இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், கடந்த 2016 ஜூலை 5-ஆம் தேதி மது அருந்த பெருமாள் பணம் கேட்டாராம். ஆனால், முருகம்மாள் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், முத்தம்மாளை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, பெருமாளை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி எம்.அன்புச்செல்வி பெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.