கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி அண்ணன், தங்கை பலி
கிருஷ்ணகிரி அணையின் சேற்று நீரில் மூழ்கி அண்ணன், தங்கை உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி அணையின் சேற்று நீரில் மூழ்கி அண்ணன், தங்கை உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள சின்னபேயனப்பள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி நரசிம்மன் (45). இவரது மனைவி கவிதா(40). இந்தத் தம்பதிக்கு தமிழ்ச்செல்வன்(8) என்ற மகனும், நந்தினி(3) என்ற மகளும் இருந்தனர். நரசிம்மனுக்கு சொந்தமான விளைநிலம், கிருஷ்ணகிரி அணையின் நீர்த் தேங்கும் பகுதி அருகே உள்ளது.
நரசிம்மன், தனது விளைநிலத்தில் மலர் சாகுபடி செய்துள்ள நிலையில், பூக்களைப் பறிக்க திங்கள்கிழமை சென்றார். அப்போது, மகன் தமிழ்ச்செல்வனும், மகள் நந்தினியும் உடன் சென்றனர். இந்த நிலையில், விளைநிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை விரட்டும்படி குழந்தைகளிடம் நரசிம்மன் கூறினாராம்.
அப்போது குழந்தைகள் ஆடுகளை விரட்டியுள்ளனர். ஆடுகள் கிருஷ்ணகிரி அணையில் நீர் தேங்கி இருக்கும் பகுதிக்குச் சென்றனவாம். தொடர்ந்து ஆடுகளை விரட்டிச் சென்ற தமிழ்ச்செல்வனும், நந்தினியும் அணையில் தேங்கி இருக்கும் சேற்று நீரில் மூழ்கினர்.
நீண்ட நேரமாகியும் குழந்தைகள் திரும்பாத நிலையில், அவர்களை நரசிம்மன் தேடிச் சென்றபோது, குழந்தைகள் இருவரும் சேற்று நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி அணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.