பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிவறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்துக்கு பென்னாகரம் மட்டுமல்லாமல், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பருவதனஅள்ளி, கூத்தப்பாடி, ஏரியூர், சின்னம்பள்ளி, தாசம்பட்டி மற்றும் நாகமரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வதற்காக தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்லுகின்றனர். மேலும், தமிழகத்தின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் அருகில் உள்ளதால் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், கடந்த 2003-2004 பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பிடமானது ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடப்பட்டு வருகிறது. இதில் பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதுகுறித்து பேரூராட்சி அலுவலர் ஜலேந்திரனிடம் கேட்டபோது, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீண்டும் கட்டணக் கழிப்பிட ஏலத்தின் போது ஒப்பந்ததாரர்கள் அறிவிப்பு பலகையில் கட்டண விவரங்களை எழுதி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படும் என்றும், உடனடியாக கட்டண விவரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்றார்.