அனுமதியின்றி பதாகைகளை வைத்தால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஒசூர் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஒசூர் நகராட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினர் மற்றும் காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறையினர் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலையோரங்களில் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகளை வைப்பதற்கு கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. எனவே ஒசூரில் அனுமதியின்றி யாராவது பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகளை வைத்தால் அதிகபட்சமாக ஓர் ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
அரூரில்... அரூர், பொ.மல்லாபுரம், கடத்தூர் பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக எந்த பதாகைகளையும் வைக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதில், செயல் அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
ஊத்தங்கரையில்... ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் பதாகைகள், அட்டைகள் தடை செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், டிஜிட்டல் பதாகை கடை உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
போச்சம்பள்ளியில்... காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதாகைகள், விளம்பரப் பலகைகள் நிறுவுவது மற்றும் நெறிமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், காவல் ஆய்வாளர்கள் பிளக்ஸ் பதாகை தயாரிக்கும் கடை உரிமையாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உயர்நீதிமன்றம் தெரிவித்த நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.