பென்னாகரம் அருகே உள்ள எட்டியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியானது பழுதடைந்ததால், அதே பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இப்பள்ளியில் எட்டியாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப் பள்ளியானது எட்டியாம்பட்டியில் இருந்து ஏரிக்கொல்லனூர் செல்லும் குறுக்குச் சாலையில் அமைந்துள்ள நிலையில், நாள்தோறும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாத நிலையில், மாணவர்கள் சாலையில் விளையாடும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பல முறை ஆசிரியர்களிடம் புகார் செய்த நிலையில், கல்வித் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.