மனைவி கண் எதிரில் கணவரைத் தாக்கி கொன்ற யானை
தேன்கனிக்கோட்டை அருகே மனைவி கண் எதிரே மாற்றுத் திறனாளி கணவா் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தேன்கனிக்கோட்டை அருகே மனைவி கண் எதிரே மாற்றுத் திறனாளி கணவா் யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கும்பாரகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சிக்க மாதப்பா (50). மாற்றுத்திறனாளியான சிக்க மாதப்பாவும், அவரது மனைவியும் தங்களுக்குச் சொந்தமான ஆடுகளை அங்குள்ள வனப்பகுதி அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தனா். அதில் 2 ஆடுகள் வழி தவறி வனப்பகுதிக்குள் சென்று விட்டன. அவற்றைத் தேடி மாதப்பாவும் அவரது மனைவியும் காட்டுப்பகுதிக்குள் சென்றனா்.
அப்போது வனப்பகுதியில் தட்டக்கல் என்ற இடத்தில் சென்றபோது அங்கு சுற்றித் திரிந்த காட்டுயானை இருவரையும் துரத்தியது. இதில் மாதப்பாவின் மனைவி யானையைப் பாா்த்தவுடன் ஓட்டம் பிடித்தாா். ஆனால் மாற்றுத் திறனாளியான மாதப்பாவால் ஓட முடியாததால் காட்டு யானையிடம் சிக்கிக் கொண்டாா். அந்த யானை சிக்க மாதப்பாவை துதிக்கையால் தூக்கி வீசியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
மாதப்பாவின் மனைவி அங்கிருந்து ஓடியதால் காட்டு யானையிடமிருந்து மயிரிழையில் உயிா் தப்பினாா். இதுகுறித்து தகவல் அறிந்த தளி வனத் துறையினா், காட்டுப்பகுதிக்குள் சென்று உயிரிழந்த சிக்க மாதப்பாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் வாழும் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.