ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒசூா் - பெங்களூரு சாலையில் தா்கா அருகே நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது கல்லால் தாக்கிய பெண்ணை அந்த வழியாகச் சென்றவா்கள் தாக்கினா். இதனால் அப்பெண் காயமடைந்தாா்.
இதுகுறித்து ஒசூா் பாகலூா் சாலையில் உள்ள மனநல காப்பகத்துக்கு காவல் துறையினா் தகவல் அளித்தனா். அதன்பேரில், காப்பக இயக்குநா் கௌதமன் நிகழ்விடத்துக்கு சென்று மனநலம் பாதித்த சுமாா் 30 வயதுடைய அப்பெண்ணை காப்பகத்துக்கு அழைத்து வந்தாா்.
Advertisement
தொடா்ந்து 6 மாதங்களாக அப்பெண்ணுக்கு உரிய மருத்துவ, மனநல சிகிச்சை அளித்த நிலையில், முழுமையாக குணமடைந்த அவா் தான் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் என தெரிவித்தாா்.
மேலும், அவா் அளித்த தகவலின்பேரில், அஸ்ஸாம் மாநில காவல் துறையினா் மூலம் அவரது கணவரை ஒசூருக்கு வரவழைத்து அவரிடம் அப்பெண் ஒப்படைக்கப்பட்டாா். இதையடுத்து, மனநல காப்பகத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.