முகப்பு
இந்தியா

இது அஸ்ஸாம் நிலவரம்! முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு!

அஸ்ஸாமில் பெண்கள் தலைமையேற்கும் வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு பற்றி..

Updated On : 26 மார்ச், 2026 at 11:10 AM
வாக்குச்சாவடி - DPS
பகிர்:

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், முழுக்க முழுக்க பெண்களின் தலைமையில் இயங்கும் வாக்குச்சாவடிகள் இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், ஒரே கட்டமாக நடைபெறவுள்ள அஸ்ஸாம் தேர்தலுக்கு வாக்குச் சாவடிகளை அமைத்தல், பாதுகாப்புக்குக் காவலர்களை அமைத்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை அஸ்ஸாம் தேர்தல் ஆணையம் முனைப்போடு செய்து வருகின்றது.

126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் ஏப்ரல் 4 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒருபக்கம் பாஜக தலைமையில் ஹிமந்த் பிஸ்வ சர்மா ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் காய்களை நகர்த்தி வருகிறார். மற்றொரு பக்கம் காங்கிரஸ் சார்பில் கௌரவ் கோகோய் எப்படியாவது இந்தமுறை ஆட்சியைப் கைப்பற்ற வேண்டும் என்று முழுவீச்சில் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றார்.

வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியைக் குறித்து திப்ருகர் துணை ஆணையர் பிக்ரம் கைரி கூறுகையில்,

மாநிலம் முழுவதும் மொத்தம் 1,322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து வாக்குச்சாவடிகள் நதிக்கரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்கள் சொந்த கிராமங்களிலேயே வாக்களிப்பதற்காக வசதியாகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சியாக, அஸ்ஸாமில் இந்தாண்டு தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பெண்களின் பங்கு அதிகரிக்கும் வகையில் 300 வாக்குச்சாவடிகளில் பெண் ஊழியர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பெண்களின் பங்களிப்பு கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட அதிகமாகும்.

வாக்குச்சாவடி அமைக்கும் பயிற்சி அமர்வுகளின்போது, பெண் பணியாளர்கள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் அவர்களின் பங்கேற்பை பிரதிபலித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சவாலான ஆற்றுப் படுகைப் பகுதிகளில் வாக்குச்சாவடி இணைப்பு வசதியை உறுதி செய்வதிலும், பெண்கள் தலைமையிலான பங்கேற்பை மேம்படுத்துவதிலும் மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஏப்ரல் 9 ஆம் தேதி அஸ்ஸாமில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தயார் நிலையை மதிப்பிடுவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பிற மூத்த மாநில அதிகாரிகளுக்கு இணையவழி ஆய்வு மற்றும் பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஆற்றங்கரையோரங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அங்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், மீட்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

summary

With the Assam Legislative Assembly elections drawing near, preparations for the polls are proceeding in full swing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.