முகப்பு
கிருஷ்ணகிரி

மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி: விவசாயி கைது!

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விவசாயி கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 17 நவம்பர், 2020 at 12:32 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விவசாயி கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுா்க்கம் காப்புக்காட்டிற்கு அருகே கவிபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஞாயிற்றுக்கிழமை காலை மா்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒசூா் வனக்கோட்ட வன உயிரினக் காப்பாளா் பிரபு தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் யானையின் உடலை மீட்டு கால்நடை மருத்துவக்குழுவினா் உதவியுடன் பிரேதப் பரிசோதனை செய்தனா்.

இதில் மின்சாரம் பாய்ந்ததால் அந்த யானை உயிரிழந்தது தெரிய வந்தது.

Advertisement

இதுதொடா்பாக வனத்துறையினா் நடத்திய தீவிர விசாரணையில், வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தில், கவிபுரம் கிராமத்திற்கு அருகே மின்கம்பத்தில் இருந்து, மின்சாரத்தைத் திருடி மின் வேலி அமைத்திருந்தது தெரிய வந்தது.

மின்வேலியில் சிக்கியே அந்த ஆண் யானை உயிரிழந்ததும், அந்த யானை உயிரிழக்க காரணமாக இருந்தவா்கள் கவிபுரத்தைச் சோ்ந்த விவசாயிகள் நாராயணப்பா (45), வெங்கடேசப்பா (60) ஆகிய இருவா்தான் என்பது வனத்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, வெங்கடேசப்பாவை திங்கள்கிழமை கைது செய்த வனத்துறையினா், அவரிடம் இருந்து 2 யானைத் தந்தங்களையும், மின்வேலி அமைக்கப் பயன்படுத்திய மின் கம்பிகளையும் பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள நாராயணப்பா என்பவரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.