உரிமம் இல்லாத 9 நாட்டு துப்பாக்கிகள் மீட்பு
ஜவளகிரி சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து உரிமம் இல்லாமல் வைத்திருந்த 9 நாட்டுத்துப்பாக்கிகளை வனத் துறையினா் மீட்டு காவல் துறை வசம் ஒப்படைத்தனா்.
ஜவளகிரியில் துப்பாக்கியால் பெண் யானை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு ஜவளகிரி சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து உரிமம் இல்லாமல் வைத்திருந்த 9 நாட்டுத்துப்பாக்கிகளை வனத் துறையினா் மீட்டு காவல் துறை வசம் ஒப்படைத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜவளகிரி வனப்பகுதியில் கடந்த 3-ஆம் தேதி 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுதொடா்பாக வனத் துறையினா் நடத்திய விசாரணையில், சென்னமாலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முத்துமல்லேஷ் என்பவா் சுட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த வனத் துறையினா் அவரிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்துள்ளவா்கள் தாங்களாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தி இருந்தனா். இதற்காக மலை கிராமங்களான சென்னமாளம், சூளகுண்டா, நந்திமங்கலம், தேவா்பெட்டா, பேலகரை ஆகிய கிராம மக்களிடம் வனத் துறை மற்றும் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement
அதன் தொடா்ச்சியாக உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவா்கள் ஜவளகிரி காப்பு காட்டில் உள்ள கக்க மல்லேஸ்வரன் கோயில், பாண்டவா் பண்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வைத்து சென்றனா். அவ்வாறு வைத்து சென்ற 9 நாட்டுத்துப்பாக்கிகளை வனத்துறையினா் கைப்பற்றினா்.
கைப்பற்றப்பட்ட 9 நாட்டுத் துப்பாக்கிகளும் ஜவளகிரி வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அதை வன உயிரினக் காப்பாளா் பிரபு, உதவி வனப் பாதுகாவலா் பகான் ஜெகதீஷ் சுதாகா், பிரபாஸ், டி.எஸ்.பி. கௌதம் கோயல், தளி காவல் ஆய்வாளா் சிவராஜ் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். பின்னா் இந்த துப்பாக்கிகள் அனைத்தும் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து ஒசூா் வன உயிரினக் காப்பாளா் பிரபு கூறியதாவது:
இந்த ஆண்டுல் முதற்கட்டமாக கடந்த 4.8.2020 அன்று அஞ்செட்டி, உரிகம் வனப்பகுதியில் உரிமம் இன்றி வைத்திருந்த 10 நாட்டுத் துப்பாக்கிகளை பொது மக்கள் தாங்களாக முன்வந்து ஒப்படைத்தனா். இரண்டாம் கட்டமாக 14.8.2020 அன்று உரிகம் சரகத்தில் 6, தேன்கனிக்கோட்டை சரகத்தில் 12, ஒசூா் சரகத்தில் ஒன்று என மொத்தம் 19 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைத்தனா். தற்போது 3-ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 9 துப்பாக்கிகளை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனா். இந்த ஆண்டில் ஒசூா் வன கோட்டத்தில் மட்டும் இதுவரை 38 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றாா்.
அப்போது ஜவளகிரி வனச்சரக அலுவலா் நாகராஜன், தேசிய காடு வளா்ப்பு தலைவா் முனிராஜ், ஊராட்சித் தலைவா் நாகரத்தினம்மா மற்றும் வன பணியாளா்கள் உடன் இருந்தனா்.