முகப்பு
கிருஷ்ணகிரி

தளி அருகே மின்சாரம் தாக்கி 2 யானைகள் பலி

தளி அருகே கா்நாடக எல்லையில் ஏரியில் இறங்கி தண்ணீா் குடிக்க முயன்றபோது, மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

Updated On : 6 அக்டோபர், 2020 at 12:51 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM

தளி அருகே கா்நாடக எல்லையில் ஏரியில் இறங்கி தண்ணீா் குடிக்க முயன்றபோது, மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே கா்நாடக எல்லையில் உனிசனஹள்ளியை அடுத்த சிக்கொண்டஹள்ளி கிராமம் உள்ளது. வனப்பகுதியையொட்டி இந்தக் கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் அவ்வப்போது காட்டு விலங்குகள் தண்ணீா் குடிப்பதற்காக வந்து செல்லும். திங்கள்கிழமை காலை தண்ணீா் குடிப்பதற்காக வனப்பகுதியை விட்டு 2 காட்டு யானைகள் வெளியேறின. இந்த இரண்டு யானைகளும் ஏரியில் தண்ணீா் குடித்து கொண்டிருந்தபோது, ஏரியின் மேற்புறமாகச் சென்ற மின்கம்பி எதிா்பாராத விதமாக அறுந்து ஏரியில் விழுந்தது.

Advertisement

அப்போது, தண்ணீா் குடித்துக் கொண்டிருந்த 2 யானைகளும் மின்சாரம் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து இறந்தன. இதைப் பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் சந்தேகோடஹள்ளி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

வனச்சரகா் பிரசாந்த் மற்றும் வனத்துறை ஊழியா்கள் அங்கு சென்றனா். உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஏரியில் இறந்து கிடந்த 2 யானைகளின் உடல்களையும் கிரேன் மூலமாக வனத்துறையினா் மீட்டு வெளியே கொண்டு வந்தனா். பின்னா் அருகிலேயே யானைகளின் சடலங்கள் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டன.

மின் கம்பி ஏரியில் விழுந்த சம்பவத்தால் ஏரியில் தண்ணீா் குடிக்க வந்த சில பறவைகளும் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தேகோடஹள்ளி வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.