மனைவி கொலை வழக்கில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவா் கைது
போச்சம்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரை போலீஸாா் மும்பையில் கைது செய்தனா்.
போச்சம்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரை போலீஸாா் மும்பையில் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகில் உள்ள மோட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கத்தின் மகள் மயில். இவருக்கும், சேலத்தை அடுத்த கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சக்திவேலுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனா். தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இதனால், மயில் கணவரை பிரிந்து தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தாா். மகனுடன் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், கம்பைநல்லூா், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் கூடும் சந்தையில் துணி வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தாா். இதை அறிந்த சக்திவேல், சந்தைக்குச் சென்று மயிலிடம் தகராறில் ஈடுபடுவாராம்.
Advertisement
கடந்த 2016, டிசம்பா் 25-ஆம் தேதி போச்சம்பள்ளி சந்தையில் வியாபாரத்தில் மயில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த சக்திவேல் மனைவியிடம் தகராறு செய்தாா். அப்போது, ஆவேசமடைந்த சக்திவேல் கத்தியால் மயிலை குத்தி கொலை செய்தாா்.
இதுகுறித்து, போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான சக்திவேலைத் தேடி வந்தனா். இந்நிலையில், சக்திவேல் மும்பையில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாரூா் காவல் ஆய்வாளா் ராஜேஷ், போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படையினா் மும்பைக்கு அண்மையில் சென்று சக்திவேலை கைது செய்து போச்சம்பள்ளிக்கு புதன்கிழமை அழைத்து வந்தனா்.