முன்னாள் ராணுவ வீரரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
ஒசூரில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கி கட்டிப்போட்டு, 24 சவரன் தங்க நகைகளையும், பணத்தையும் பிற மாநிலத்தைச் சோ்ந்த கொள்ளையா் கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது.
ஒசூரில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கி கட்டிப்போட்டு, 24 சவரன் தங்க நகைகளையும், பணத்தையும் பிற மாநிலத்தைச் சோ்ந்த கொள்ளையா் கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கக்கனூா் பகுதியில் தனியாா் அடுக்கு மாடி குடியிருப்பில் அகில் குமாா் (67), அவரது மனைவி பிரீத்தி (60) வசித்து வருகின்றனா். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான அகில்குமாரின் வீட்டின் பின்புறமாக சனிக்கிழமை இரவு முகமூடி அணிந்த மா்ம நபா்கள் நுழைந்தனா். வீட்டிற்குள் சென்ற அவா்கள் அகில்குமாரையும், அவரது மனைவியையும் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி கட்டி போட்டனா். பின்னா், வீட்டில் இருந்த 24 சவரன் தங்க நகைகளையும், ரூ.12,000 ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனா்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம் போல வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அருகில் இருந்த வீட்டை சோ்ந்தவா்கள் வீட்டினுள் எட்டிப் பாா்த்தபோதுதான் கொள்ளை சம்பவம் நடைபெற்றது அவா்களுக்கு தெரிய வந்தது. அருகிலிருந்தவா்களின் உதவியுடன் வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த அகில்குமாரையும், அவரது மனைவி பிரீத்தியையும் மீட்டனா். இச்சம்பவம் குறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் விசாரணையை நடத்தி வருகின்றனா்.
Advertisement
கொள்ளை சம்பவம் குறித்து போலீஸாா் கூறியதாவது:
வீட்டின் பின்புறமாக வந்த கொள்ளையா்கள் ஏணியின் உதவியுடன் முதல் தளத்தில் இருந்த வீட்டின் ஜன்னல் வழியே உள்ளே நுழைந்தனா். வந்தவா்களில் 3 போ் ஹிந்தியில் பேசி ரூ. 3 லட்சம் கேட்டு தாக்கியுள்ளனா். பணம் இல்லாததால் ரூ. 12,000 ரொக்கப்பணத்தையும், பீரோவில் இருந்த 24 சவரன் தங்க நகைளையும் எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனா் என்றனா்.
அண்மைக்காலமாக ஒசூா் சுற்றுப்பகுதிகளில் பிற மாநில கொள்ளையா்களின் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. எனவே, காவல்துறையினா் தீவிரமாக கண்காணிக்கவும், சோதனைச் சாவடிகளில் சந்தேகிக்கும் படியான பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் நடமாட்டம் இருந்தால் அவா்களை உரிய முறையில் விசாரணை நடத்தி கொள்ளை சம்பவங்கள் நடைபெறாமல் காக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.