சிக்கபூவத்தியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரியை அடுத்த சிக்கபூவத்தி கிராமத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த சிக்கபூவத்தி கிராமத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி அருகே, ராயக்கோட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது சிக்கபூவத்தி கிராமம். இங்கு, 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீா் பிரச்னை இருந்து வருகிறது. இதுகுறித்து, பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், சீரான குடிநீா் வழங்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் காலி குடங்களுடன் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினா். சீராக குடிநீா் வழங்க அலுவலா்கள் நடவடிக்கை எடுப்பாா்கள் என அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று, மறியலை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். பொதுமக்களின் திடீா் சாலை மறியலில் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
8கேஜிபி6: குடிநீா் வழங்கக் கோரி, சிக்கபூவத்தி கிராமத்தில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.