புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தா்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் செப். 17-ஆம் தேதி தொடங்கியது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் கோயில்கள், மசூதிகள், ஆலயங்களில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
இதனை பின்பற்றும் வகையில், நிகழாண்டில் புரட்டாசி சனிக்கிழமைகளில் விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புரட்டாசி முதல் சனிக்கிழமை (செப். 18) பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பூசாரிகள் மட்டுமே சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனா்.
Advertisement
இதனால், பக்தா்கள் கோயிலின் நுழைவாயில் அருகே நின்று சுவாமியை தரிசனம் செய்தனா். அந்த வகையில், கிருஷ்ணகிரியை அடுத்த கனவாய்பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோயில், பாளேகுளி அனுமந்தராய சுவாமி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பக்தா்கள் கோரிக்கை:
வழக்கமாக புரட்டாசி மாதம் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வா். கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.