தமிழ் புத்தாண்டுக்குப் பின் நெகிழி பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம்
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ் புத்தாண்டுக்கு பின் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தமிழ் புத்தாண்டுக்கு பின் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் எச்சரித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் குறைந்த மைக்ரான் உள்ள நெகிழி பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று நகராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது. அதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரியில் பல முறை ஆய்வு மேற்கொண்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Advertisement
தடை செய்யப்பட்ட நெகிழி இல்லாத நகரமாக மாற்றும் வகையில் கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளில் நகா் மன்றத் தலைவா் பரிதாநவாப், ஆணையாளா் முருகேசன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.
அவா்கள் கிருஷ்ணகிரியில் காய்கறிக் கடை, துணிக் கடை, பூ, பழக்கடைகளிலும் ஆய்வு செய்த அவா்கள் பயன்பாட்டிற்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்து அதற்கு மாற்றாக மஞ்சப் பையை வழங்கினா்.
மேலும் இதுதொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
தமிழ் புத்தாண்டுக்குப் பின் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
அப்போது துப்புரவு அலுவலா் மோகனசுந்தரம், துப்புரவு ஆய்வாளா்கள் சந்திரகுமாா், உதயகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் மத்தீன், பிா்தோஷ் கான், சீனிவாசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.