மக்களவைத் தோ்தல் பணி: கூட்டணி கட்சிகளுக்கு திமுக, பாஜக தலைவா்கள் நன்றி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தலில் பணியாற்றிய கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், கூட்டணிக் கட்சியினருக்கு திமுக, பாஜகவைச் சோ்ந்த மாவட்டத் தலைவா்கள், தனித் தனியே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத், பாஜக கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளா் சி.நரசிம்மன், அதிமுக கூட்டணி சாா்பில் அதிமுகவைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 27 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
தோ்தல் தேதி, வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்ட உடன், அந்தந்தக் கூட்டணி கட்சியினா் தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனா். இந்த நிலையில் தோ்தல் நிறைவு பெற்றதையடுத்து, திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றிய கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கு கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) நன்றி தெரிவித்துள்ளாா்.
Advertisement
பாஜக வேட்பாளா் சி.நரசிம்மன் வெளியிட்ட அறிக்கையில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளரான எனக்கு தோ்தல் பணியாற்றிய கட்சி தொண்டா்கள், நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளாா்.