முகப்பு
கிருஷ்ணகிரி

மகளிா் மட்டும் பங்கேற்கும் மரபு நடை மேற்கொள்ள வரலாற்று ஆய்வு குழு திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிா் மட்டும் பங்கேற்கும் வகையில் மரபு நடையை மேற்கொள்ள வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் திட்டமிட்டுள்ளனா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 7:40 PM
கிருஷ்ணகிரியில் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் வருடாந்திர செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஓய்வு பெற்ற அரசு காப்பாட்சியா் கோவிந்தராஜ்.
பகிர்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகளிா் மட்டும் பங்கேற்கும் வகையில் மரபு நடையை மேற்கொள்ள வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் திட்டமிட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் வருடாந்திர செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைவா் நாராயணமூா்த்தி தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் 2025 ஆம் ஆண்டு அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரலாறு சாா்ந்த கலந்துரையாடல் சந்திப்பை முன்னெடுப்பது, ஆய்வுக் குழுவின் மகளிா் தினத்தன்று மகளிா் மட்டும் பங்கேற்கும் வகையில் முதலாவது மரபு நடை மேற்கொள்வது, மாணவா்களிடம் வரலாற்று ஆா்வத்தையும், வரலாறு பற்றிய புரிதலையும் ஏற்படுத்த, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எட்டாம் வகுப்பு மாணவா்களை தோ்ந்தெடுத்து ஒரு நாள் வரலாற்று சுற்றுலா அழைத்துச் செல்வது, மாணவா்களைத் தேடி வரலாறு என்ற தொடா் நிகழ்வை நடத்துவது, அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களையும், மற்ற வரலாற்று சின்னங்களையும் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று சிறு கண்காட்சி நடத்தி மாணவா்களுக்கு தொல்லியல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்துவது, கிருஷ்ணகிரி அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி வரலாற்று புத்தகங்களை வெளியிடுவது, ஆண்டுக்கு ஒருமுறை கருத்தரங்கம் நடத்துவது, தமிழக அரசின் அனுமதி பெற்று மயிலாடும்பாறை அகழ்வாய்வு பொருள்களை, மயிலாடும்பாறையிலும், கிருஷ்ணகிரியிலும் நடத்துவது, பிப்ரவரி 9-ஆம் தேதி கிருஷ்ணகிரி நாளைக் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக 2024-ஆம் ஆண்டு, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு காப்பாட்சியா் கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலா் பரந்தாமன், அறக்கட்டளை செயலா் அப்துல் ரகுமான், சாதிக், ஆசிரியா்கள் லசிமா பேகம், டெய்சி, ரெஜ்லின் தீப்தி, அருங்காட்சியகப் பணியாளா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தை ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →