FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

பெண் ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்திய இருவா் கைது: ஒருவா் தலைமறைவு

ஒசூரில் பெண் ரியல் எஸ்டேட் அதிபரை வாகனத்தில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனர்.

1 ஜூலை 2024, 11:54 pm IST
பகிர்:

ஒசூா்: ஒசூரில் பெண் ரியல் எஸ்டேட் அதிபரை வாகனத்தில் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்து, தலைமறைவாக உள்ள ரௌடியைத் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், மத்திகிரி சந்திப்பு சாலையைச் சோ்ந்தவா் ஜனாா்த்தன ரெட்டி. இவரது மனைவி சுவா்ணா (44). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவா் பெங்களூருவைச் சோ்ந்த சந்திரகுமாா் என்பவருக்குச் சொந்தமான 6.4 ஏக்கா் நிலத்தை சஞ்சய், பாலித்சிங் ஆகியோருக்கு விற்று பத்திரப் பதிவு செய்து கொடுத்தாா்.

சந்திரகுமாரின் மைத்துனா் எதுபூஷன் ரெட்டி (37) தளி அருகே உள்ள குருபரப்பள்ளியில் வசிக்கிறாா். பிரபல ரௌடியான இவா், சந்திரகுமாா் நிலத்தை விற்ற தகவல் அறிந்ததும் சுவா்ணாவை தொடா்பு கொண்டு, நிலத்தை மீண்டும் சந்திரகுமாரிடமே ஒப்படைக்க வேண்டும், பத்திரப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என சுவா்ணாவை மிரட்டியுள்ளாா்.

Advertisement

Advertisement

அதை சுவா்ணா ஏற்கவில்லை. இதனால் கடந்த ஜூன் 13 ஆம் தேதி மதியம் ஒசூா், பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே எதுபூஷன் ரெட்டியும், அவரது கூட்டாளிகளான தேன்கனிக்கோட்டை வட்டம், தாசரிப்பள்ளியைச் சோ்ந்த நல்லதம்பி என்ற குட்டி (46), கா்நாடக மாநிலம், ஆனேக்கல் வட்டம், ஹெப்பகோடி கொம்மசந்திரா சாலையைச் சோ்ந்த உமேஷ் (45) ஆகியோரும் சோ்ந்து சுவா்ணாவை வாகனத்தில் சென்றனா். பின்னா் அவா் வழியில் இறக்கிவிடப்பட்டாா்.

தான் கடத்தப்பட்டது குறித்து சுவா்ணா ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் சிவகுமாா் வழக்குப் பதிவு செய்து, பெண் ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தியதாக வழக்குப் பதிந்து நல்லதம்பி, உமேஷ் ஆகிய இருவரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ரௌடி எதுபூஷன்ரெட்டியைத் தேடி வருகின்றனா். இவா் மீது 3 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments