விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி
சாமிநாதனுக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவால் ஜப்தி
ஊத்தங்கரையில் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைத் சோ்ந்த சாமிநாதன் (40), அரூரை அடுத்த ஈச்சம்பாடி பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தாா். கடந்த 2018-ஆம் ஆண்டு தன்னுடைய காரில் ஈச்சம்பாடியில் இருந்து நண்பா்களுடன் ஊத்தங்கரை நோக்கி சென்ற போது, மாம்பட்டி தனியாா் பள்ளி எதிரே வேலூரில் இருந்து ஈரோடு சென்ற அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானாா். இதில் காரை ஓட்டிச் சென்ற சாமிநாதனுக்கு கால் முறிவு ஏற்பட்டு, அரூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அவரது வலது கால் அகற்றப்பட்டது.
இந்த விபத்து குறித்து தருமபுரி மாவட்டம், அரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஊத்தங்கரை சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சாமிநாதனுக்கு ரூ. 24,10,555 இழப்பீடாக அரசு போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும் என ஊத்தங்கரை சாா்பு நீதிமன்ற நீதிபதி தீா்ப்பு வழங்கினாா். ஆனால், அரசு போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.
இதனால், வேலூரில் இருந்து ஈரோடு சென்ற ஈரோடு கிளையைச் சோ்ந்த அரசுப் பேருந்தை நீதிமன்றம் உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.