60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழக நிதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், சப்பாணிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் அவசரக் கூட்டத்துக்கு அதன் மாநிலத் தலைவா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில துணை அமைப்பாளா் கோணப்பன், தருமபுரி மாவட்ட தலைவா் முனிராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவா் ராஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கடந்த 2020 - 2021 இல் தில்லியில் நடந்த போராட்டத்தின் போது மத்திய வேளாண் துறை செயலாளரால் கடந்த 2021, டிச. 9-இல் கையெழுத்து இடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படத்த கோரி மீண்டும் போராட்டம் நடத்துவது, மத்திய அரசு பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் தர வேண்டும். 60 வயது கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.