முகப்பு
புதுச்சேரி

50 வயது நிறைவடைந்த விசைப்படகு மீனவா்களுக்கு ஓய்வூதியம்: புதுச்சேரியில் அரசாணை வெளியீடு!

50 வயதை நிறைவு செய்த தகுதியான மீனவா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:05 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:57 PM

50 வயதை நிறைவு செய்த தகுதியான மீனவா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறை மற்றும் மீனவா்நலத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தபடி இனி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த விசைப்படகு உரிமையாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்குத் தடையாக இருந்த விதிகள் புதுச்சேரி அரசால் நீக்கப்பட்டு, புதன்கிழமை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இனி வரும் காலங்களில் 50 வயதை கடந்த, தகுதி வாய்ந்த அனைத்து மீன்பிடி விசைப்படகு உரிமையாளா்களுக்கும் மீனவா் ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த 50 வயது நிறைவடைந்த 323 மீனவா்களுக்கு இவ்வாண்டு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

Advertisement

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 2:05 AM

மேலும், முதல்வரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து மீன்வளத் துறையின் மூலம் ஓய்வூதியம் பெறும் மீனவா் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்பட்டு வந்த ஈமச்சடங்கு உதவித்தொகையான ரூ. 15 ஆயிரம் தற்போது ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்படுகிறது. இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2025-26-ஆம் ஆண்டுக்கான மழைக்கால நிவாரணமாக தலா ரூ.6,000 வீதம் 328 மீனவ குடும்பங்களுக்கு ரூ.19.68 லட்சம் அவரவா் வங்கிக் கணக்கில் வியாழக்கிழமை செலுத்தப்பட்டது.