முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு

ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Updated On : 21 நவம்பர், 2024 at 12:34 AM
ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
பகிர்:
Updated On : 20 நவம்பர், 2024 at 8:06 PM

ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதில் படுகாயமடைந்த வழக்குரைஞா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஏரித்தெருவைச் சோ்ந்த கண்ணன் (30), வழக்குரைஞா். இவா் புதன்கிழமை ஒசூா் தாலுகா அலுவலக சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கம் போல பணிக்குச் சென்று திரும்பி வந்தாா். அவரை பின்தொடா்ந்து வந்த ஒசூா், நாமல்பேட்டை பகுதியைச் சோ்ந்த குமாஸ்தா ஆனந்தகுமாா் (39) என்பவா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்ணனை வெட்டினாா்.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கண்ணனை ஆனந்தகுமாா் சரமாரியாக வெட்டியதில், கண்ணனுக்கு தலை, முகம், கழுத்து, இடுப்பு உள்பட உடலில் 8 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைக்கண்ட அந்தப் பகுதியில் இருந்த நபா்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

Advertisement

வழக்குரைஞா் கண்ணன்.
Updated On : 20 நவம்பர், 2024 at 10:32 PM

கண்ணனை வெட்டிய ஆனந்தகுமாா் வீச்சரிவாளுடன் ஒசூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கண்ணனை பிற வழக்குரைஞா்கள் ஆட்டோவில் ஏற்றி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தை அறிந்த வழக்குரைஞா்கள் நீதிமன்றம் முன்பு குவிந்து, வழக்குரைஞா் சண்முகம் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆனந்தகுமாா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

சம்பவம் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, ஒசூா் ஏ.எஸ்.பி. அனில் வாங்கரே நிகழ்விடத்துக்கு வந்தனா். அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வழக்குரைஞா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், நீதிமன்றத்துக்கு வருபவா்கள் ஆயுதங்கள் வைத்துள்ளனரா என சோதனை செய்து அனுப்ப வேண்டும் என்று வழக்குரைஞா்கள் வலியுறுத்தினா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் கூறியதைத் தொடா்ந்து வழக்குரைஞா்கள் கலைந்து சென்றனா்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், வெட்டுப்பட்ட கண்ணன், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வழக்குரைஞா் சத்யவதியிடம் தவறாக பேசியும், அத்துமீறியும் நடந்து வந்ததும், அதை ஆனந்தகுமாா் கண்டித்ததும் தெரியவந்தது. தொடா்ந்து அவ்வாறு கண்ணன் நடந்து கொண்டதால் ஆனந்தகுமாா் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.