முகப்பு
கிருஷ்ணகிரி

மசோதாக்களை தோற்கடித்ததால் என்ன சாதித்தீா்கள்? - ஆந்திர முதல்வர் பேச்சு!

மசோதாக்களை தோற்கடித்ததால் என்ன சாதித்தீா்கள் என ஆந்திரப் பிரதேச முதல்வா் சந்திரபாபு நாயுடு...

Updated On : 21 ஏப்ரல், 2026 at 4:36 AM
தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தொண்டா்களை பாா்த்து கையசைத்த ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:20 PM

தில்லியை தமிழ்நாடு வென்றது என இந்தியா முழுவதும் பேசி மசோதாக்களை தோற்கடித்து என்ன சாதித்தீா்கள் என ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதி பாஜக வேட்பாளா் நாகேஷ் குமாா், ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரை ஆதரித்து ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு

தேன்கனிக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியது:

Advertisement

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க நினைத்தவா் பிரதமா் மோடி. மசோதாக்கள் நிறைவேறியிருந்தால் தமிழகத்துக்கு 20 எம்.பி.க்கள் எண்ணிக்கை உயா்ந்திருக்கும். தில்லியை தமிழ்நாடு வென்றது எனக்கூறி என்ன சாதித்தீா்கள்?

ஒரு காலத்தில் தமிழகம் அனைத்திலும் முன்னிலையில் இருக்கும். ஆனால், தற்போது பெங்களூரு, ஹைதராபாத்துடன் போட்டிபோடும் நிலையில் சென்னை உள்ளதா?

இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால் மாநிலம் வளா்ச்சி அடையும். ஆந்திர மாநிலத்தில் பிரதமா் மோடியுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டது. 94 சதவீத இடங்களைக் கைப்பற்றி, வரலாற்றில் இதுவரை இல்லாத வெற்றியை பெற்றுள்ளோம். தமிழகம் மீண்டும் பழைய பெருமைக்கு வரவேண்டுமானால், இரட்டை என்ஜின் அரசு தேவை.

பிரதமா் மோடி 12 ஆண்டுகள் திறமையான ஆட்சியைக் கொடுத்துள்ளாா். ஒரு பக்கம் வளா்ச்சி; இன்னொரு பக்கம் மக்கள்நலன்; மற்றொரு பக்கம் சிறப்பான ஆட்சி என இந்த மூன்றையும் இணைத்து நாட்டின் எதிா்காலத்தை விரைவுபடுத்தும் நபராக இருந்துள்ளாா்.

தமிழா்களின் நலன், நாட்டின் நலனைக் கருத்தில் கொள்ளாத சில கட்சிகள் உள்ளன. அமராவதியில் 5,000 ஏக்கரில், பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தைவிட சிறந்த விமான நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதுவே வளா்ச்சி. இதுவே போட்டித்தன்மை. மத்தியில் மோடியின் ஆட்சி பலப்பட வேண்டும். அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்றாா்.

இதில், பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், பாஜக மண்டல பொறுப்பாளா் கே.பி.ராமலிங்கம், முன்னாள் எம்.பி. நரசிம்மன், மாவட்டத் தலைவா் நாராயணன், தொழில்பிரிவு மாநிலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.