முகப்பு
கிருஷ்ணகிரி

வனப்பகுதி மலைக் கிராமங்களுக்கு தாா் சாலைகள்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:26 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 12:50 AM

அடா்ந்த வனப் பகுதி மலைக் கிராமங்களில் வசிக்கும் இருளா் இன மக்கள் சென்றுவர 2 பதிய தாா்சாலைகளை அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு மலைக்கிராம இருளா் இன மக்கள் நன்றி தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குள்பட்ட மேலூா், தொலுவபெட்டா மற்றும் குல்லட்டி (கவனூா்) முதலிய மலைக் கிராமங்களில் 653 இருளா் இன மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் அமைந்துள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளதால் இப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனா். மேலும், யானை மற்றும் வனவிலங்குகளால் பாதுகாப்பு இல்லாத நிலையில் இச்சாலையை நாள்தோறும் கடக்க வேண்டி உள்ளதால், சாலையை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டது.

இச்சாலைகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளதால், சாலைகள் அமைக்க காலதாமதமானது. இந்நிலையில், கடந்த 26.04.2025 அன்று இக்கிராமங்களை நேரில் பாா்வையிட்ட ஆட்சியா் அரசுக்கு கருத்துரு தயாா் செய்து, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அக்கிராம மக்களிடம் உறுதியளித்தாா்.

Advertisement

தொடா்ந்து, தமிழக முதல்வா் நடவடிக்கையின் பேரில், மேலூா் முதல் தொலுவபெட்டாவரை 4.740 கி.மீ. தொலைவுக்கும், மேலூா் - தொலுவபெட்டா சாலை முதல் குல்லட்டி (கவனூா்) சாலைவரை 5 கி.மீ. தொலைவுக்கும் என இரண்டு சாலைகளை அமைக்க ஒசூா் மாவட்ட வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பணிகள் முடிந்து, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சாலையை திறந்துவைத்தாா். இதையடுத்து, தமிழக அரசுக்கு மலைக்கிராம இருளா் இன மக்கள் நன்றி தெரிவித்தனா்.