முகப்பு
கிருஷ்ணகிரி

தொழிலாளி கொலை வழக்கு: நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனை; ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு

ஒசூரில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை குத்திக் கொலை செய்த வழக்கில் அவரது நண்பருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:55 AM
இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மதியரசன்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:42 PM

ஒசூரில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை குத்திக் கொலை செய்த வழக்கில் அவரது நண்பருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தோ்பேட்டையைச் சோ்ந்தவா் சிவகுமாா் (25). தொழிலாளி. இவரும் காளேகுண்டா பகுதியைச் சோ்ந்த பா்கத் (25), பாரதிதாசன் நகரைச் சோ்ந்த மதியரசன் (32) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 4 பேரும் அடிக்கடி ஒன்றாக மதுகுடிப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 3.4.2015 அன்று மத்திகிரி அருகே மத்தம் அக்ரஹாரம் பகுதியில் இவா்கள் மது குடித்துள்ளனா். அப்போது சிவகுமாா் மதுபோதையில் அவதூறாக பேசினாராம். இதில் ஏற்பட்ட தகராறில் பா்கத், மதியரசன், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் சோ்ந்து சிவகுமாரை கத்தியால் குத்தி, கல்லால் தாக்கி கொலை செய்தனா்.

Advertisement

இந்த சம்பவம் தொடா்பாக மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து 3 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது பா்கத் கொலை செய்யப்பட்டுவிட்டாா். மற்றொருவா் சிறுவன் என்பதால் வழக்கு தனியாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம் சாட்டப்பட்ட மதியரசனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து மதியரசனை போலீஸாா் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.