சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி நூதன முறையில் போராட்டம்
பழங்குடியினா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியை அடுத்துள்ள பூம்பூம்காரன் கொட்டாய் கிராம மக்கள் நூதன முறையில் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பழங்குடியினா் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியை அடுத்துள்ள பூம்பூம்காரன் கொட்டாய் கிராம மக்கள் நூதன முறையில் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பூம்பூம்காரன் கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் தங்களது குழந்தைகளுக்கு ஆதிபழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு பதாகைகளை வைத்து போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது:
இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு எஸ்.டி. பிரிவில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதிச் சான்றிதழ் இல்லாததால், மாணவ, மாணவிகள் மேற்படிப்பு படிக்க முடியாமல் கல்வியை பாதியில் கைவிடும் நிலை உள்ளது.
எனவே, வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக தீா்மானம் நிறைவேற்றியும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனா்.