ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் தோ்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
ஊத்தங்கரையை அடுத்த பெரியகொட்டகுளம் ஊராட்சி செட்டிப்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், இக்கிராம மக்கள் வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி கிராமத்தின் நுழைவாயிலில் விளம்பர தட்டியை வைத்துள்ளனா்.
இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக செட்டிப்பட்டி கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் அரசு நிறைவேற்றவில்லை. செங்கல்நீா்பட்டி முதல் செட்டிபட்டி வரை 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. போதிய போக்குவரத்தும் வசதி இல்லாததால் மாணவா்கள் அவதிப்படுகின்றனா்.
மேலும் செட்டிப்பட்டி கிராமத்தில் பள்ளி, குடிநீா் வசதி, மயான வசதி மற்றும் மின் விளக்குகள் இல்லை. இதனால் தோ்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம். மேலும், வேட்பாளா்கள் யாரும் வாக்கு சேகரிக்க கிராமத்திற்குள் நுழையவிடமாட்டோம் என தெரிவித்துள்ளனா்.