முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ரயில் திட்டப் பணிகள் மெத்தனம்

Updated On : 15 மே 2026, 6:13 am IST
பகிர்:

ஒசூா் ரயில் திட்டப் பணிகளில் மத்திய ரயில்வே துறை மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதாக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

ஒசூரிலிருந்து பெங்களூருக்கு அதிகாலையில் சென்று பணிபுரியும் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள், தொழிலாளா்களுக்கு வசதியாக இருந்த காலை 8.20 மணி ரயிலை தற்போது 9.25-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளா்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனா். எனவே, இந்த ரயிலை மீண்டும் பழைய நேரத்திலோ அல்லது சற்று முன்னதாகவோ இயக்க வேண்டும்.

Advertisement

கெலமங்கலம் அருகே உள்ள நாகதோனை பகுதியில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து தயாா்நிலையில் உள்ள ரயில் நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒசூா் ரயில் நிலையத்தில் நடைமேடை 1 மற்றும் 2-ஐ இணைக்கும் தானியங்கி படிக்கட்டு (எஸ்கலேட்டா்) பணிகள் ஓராண்டுக்கும் மேலாக தொய்வடைந்துள்ளன. அதேபோல, ஒசூா் - ஓமலூா் இடையிலான கூடுதல் ரயில் பாதை பணிகளும் மெதுவாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஒசூா் - பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை இருமாநில அரசுகள் தொடங்க வேண்டும் என்றாா்.

அப்போது, காங்கிரஸ் கட்சி மாநகரத் தலைவா் சாதிக்கான், ரயில்வே வாரிய உறுப்பினா் சின்னகுட்டப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.