திருச்செங்கோடு வைகாசி தேர்த்திருவிழா கடைகள் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் கவுன்சிலர் கத்தியால் குத்தப்பட்டார்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி (எ) குண்டுமணி (61) நாமக்கல் ரோடு பெரிய ஓங்காளியம்மன் கோயில் அருகில் வசித்து வருகிறார். இவரது மனைவி கலாவதி, இருவரும் கவுன்சிலராக இருந்துள்ளனர். குண்டுமணி வைகாசி தேர்திருவிழாயொட்டி தற்காலிக கடைகளை ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைக்குப் பெற்று இவர் வாடகை வசூலிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று பெரியதேர் நிற்கும் இடத்தில் பந்தல்கள் அமைக்க பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது குண்டுமணிக்கும் நாற்பது கால் மண்டபம் அருகில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் குமார்(38) என்பவருக்கும் தேர்க்கடை ஏலம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆவேசமடைந்த குமார் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குண்டுமணியின் வயிற்றில் குத்தி விட்டு தப்பிச் சென்றார். காயமடைந்த குண்டுமணி தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.