தமிழகத்தில் உணவு தேடி விளைநிலங்களுக்குச் செல்லும் மயில்கள் விஷம் வைத்துக் கொத்துக் கொத்தாய் கொல்லப்படும் கொடூரம் கடந்த 10 ஆண்டுளாக நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க ஏரி, குளங்களில் சரணாலயங்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மயில்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் எத்தனை மயில்கள் உள்ளன என்பதை தோராயமாகக்கூடச் சொல்ல முடியாது. தமிழக வனத் துறையிடம் அப்படியொரு புள்ளிவிவரமே இல்லை.
மயில்கள் குறித்த மாநிலம் தழுவிய கணக்கெடுப்பு நடத்தப்படவும் இல்லை. எவ்வளவு மயில்கள் இருக்கின்றன என்ற விவரம் தெரிய வந்தால்தானே, மயில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். தேசியப் பறவையான மயிலுக்கு தமிழ்நாட்டில் ஒரு சரணாலயம்கூட இல்லை.
விஷம் வைத்துக் கொல்லப்படும் மயில்கள்...
தமிழகத்தில் மயில்கள் இனப்பெருக்கம் அதிகரித்துவரும் வேளையில் மயில்கள் விஷம் வைத்தும், வேட்டையாடப்பட்டுக் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது என்று மத்திய வனத் துறையின் கீழ் இயங்கும் வைல்ட்லைப் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்தது.
குறிப்பாக, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மயில்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகிற சம்பவங்கள் இப்போதும் தொடர்ந்து கொண்டே இருப்பதாக பறவைகள் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அண்மையில் மதுரை மாவட்டம், மருதங்குளம் என்ற இடத்தில் கண்மாயில் நெல்லில் விஷம் வைத்து சுமார் 50 மயில்கள் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு ஆண்டுதோறும் தமிழகத்தில் சுமார் 10,000 மயில்கள் வேட்டையிலும், விஷம் வைத்தும் கொல்லப்படுவதாக பறவைகள் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம், நடுக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர் எம்.முத்துசாமி கூறியது:
சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் கரும்புத் தோட்டங்களுக்குள்ளும், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கண்மாய் கரையை ஒட்டிய சீமைக் கருவேலங் காடுகளிலும் லட்சக்கணக்கில் மயில்கள் வசிக்கின்றன.
தமிழகத்தில் இறைச்சிக்காகவும், இறக்கைகளுக்காகவும் மயில்கள் வேட்டையாடப்படுகின்றன. இரண்டு மயில் இறக்கை 8 முதல் 10 டாலர் வரை விற்கப்படுகிறது. அதனால், மயில்கள் இனம் தமிழகத்தில் வேகமாக அழிந்து வருகிறது.
ஏரி, குளங்களில் சரணாலயங்கள்...
தமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் சுமார் 1 லட்சம் ஏரி, குளங்கள் உள்ளன. ஒவ்வொரு ஏரி மற்றும் குளங்களில் சுமார் 10 ஏக்கர் நிலத்தை வனத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து மயில்களுக்கான உணவுப் பொருள்கள் கிடைக்கும் பழ மரக்கன்றுகளை வைத்து பராமரிக்கலாம். மேலும், சோளம், கம்பு போன்றவற்றை மானாவாரியாகப் பயிரிடலாம். இதன்மூலம் மயில்களுக்கு தானியங்கள் மற்றும் புழு, பூச்சி போன்ற உணவு வகைகள் கிடைக்கும்.
இதைச் செயல்படுத்தினாலே மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்படுவது தடுக்கப்படும். மேலும், வேட்டையாடுபவர்களையும் எளிதில் கண்டுபிடித்து மயில்கள் கொல்லப்படுவதைத் தடுத்து விடலாம்.
3 லட்சம் மயில்கள்: இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியது: 1972ஆம் ஆண்டு வைல்டு லைப் சட்டம் அமலுக்கு வந்தப் பிறகு வேட்டை என்பது முழுமையாக இல்லை. மயில் தேசியப் பறவை என்பதால், அதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு காலத்தில் மயிலைக் கொன்று நெய் எடுத்தார்கள். இப்போது மயிலைத் துன்புறுத்தினாலே குற்றம். எங்காவது ஒன்று, இரண்டு மயில்கள் சுடப்படலாம், அதைக்கூடக் கண்காணிக்கிறோம்.
முறையான கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்றாலும், தமிழகத்தில் சுமார் 3 லட்சம் மயில்கள் இருக்கலாம். 10 ஆண்டுகளில் 10 மடங்கு அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பறவைகள் தொடர்ந்து தங்குகின்ற இடத்தில்தான் சரணாலயம் அமைக்க முடியும். மயில்களைப் பொருத்தவரை தொடர்ந்து ஒரே இடத்தில் தங்குவது கிடையாது. அதனால்தான் சரணாலயம் அமைக்கப்படவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.