திருச்செங்கோட்டில் வானவில் கூட்டுப் பண்ணையம் குறித்த பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் கூட்டுப் பண்ணைய திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 56 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டது. இதில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து, வானவில் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிறுவனத்தில் தேர்வு செய்த 10 இயக்குநர்களுக்கு திருச்செங்கோடு உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை நிர்வகிக்க குழுக்கள் அமைத்தல், வங்கிக் கணக்கு தொடங்குதல், பொதுக்குழு கூட்டம் நடத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல், வணிக செயல் திட்டம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு நாமக்கல் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சிதம்பரம் தலைமை தாங்கி அரசின் நிதிஉதவிகள் பற்றி விளக்கினார். வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) அசோகன் கூட்டுப் பண்ணைய திட்டங்கள் நன்மைகள் பற்றி விளக்கினார். நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் பிரகாஷ் இயக்குநர்கள் பங்கு பற்றி விளக்கினார் மற்றும் வல்வில் சுதேசி உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.