"கொசு ஒழிப்பு முயற்சி மக்கள் இயக்கமாக மாற வேண்டும்'
கொசு ஒழிப்பு முயற்சிகளை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொசு ஒழிப்பு முயற்சிகளை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய கட்டுமான இடங்கள், காலிமனைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வியாழக்கிழமைதோறும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நல்ல தண்ணீர் தேங்கும் இடங்களையும், பொருள்களையும் கண்டறிந்து, தீவிர கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் உபயோகத்துக்கு வைத்திருக்கும் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை ஏடிஸ் கொசுக்கள் நுழைந்து முட்டையிடா வண்ணம் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.
காய்ச்சல் ஏற்பட்டவுடன், பொதுமக்கள் தாமதிக்காமல் அருகே உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி உரிய பரிசோதனை செய்து இலவச சிகிச்சை பெறலாம். மேலும் சித்த மருத்துவத்தில் வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரை குடிக்கலாம். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும், மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
கொசு ஒழிப்பு முயற்சிகளை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு தொண்டு நிறுவனங்கள், வியாபார சங்கங்கள், கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள், இளைஞர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.