ராசிபுரம் புதைகுழி திட்டம்: விரைந்து முடித்திடக் கோரி நூதன போராட்டம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் நடந்து வரும் புதைக்குழி சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் நடந்து வரும் புதைக்குழி சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் முன்பாக கழுதை உருவப்படத்திடம் மனு அளிக்கும் நூதன போராட்டம் நடந்தது.
ராசிபுரம் நகராட்சி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக பணிகள் நடந்துவருகின்றன. இப் பணிகள் நீண்ட நாட்களாக ஆமை வேகத்தில் நடந்து வருவதால், நகரில் விபத்துகள், வாகன நெரிசல்கள் அதிக அளவில் ஏற்பட்டு பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திவருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆங்காங்கே நடந்து வரும் இந்தப் பணிகளால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை விரைந்து நடத்தி முடித்திட பல்வேறு சமூக அமைப்புகள் ராசிபுரம் நகராட்சியிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, ராசிபுரம் மக்கள் நலக் குழு சார்பில் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு கழுதை படத்திடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு மக்கள் நலக் குழுத் தலைவர் ஆ.நீலவானத்து நிலவன் தலைமை வகித்தார். எல்.கே.ராஜேந்திரன் வரவேற்றார். ந.பழனிசாமி, ச.கார்த்திகேயன், சபரிபாலுசாமி, து.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலர் எஸ்.மணிமாறன் போராட்டத்தை துவக்கி வைத்தார். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் நல்வினை செல்வன் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். ஆதி தமிழர் பேரவை மாநில துணை பொதுச் செயலர் செல்வ வில்லாளன், சி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.