முகப்பு
நாமக்கல்

லாரி திருட்டு: ஓட்டுநர் கைது

நாமக்கல்லில் ரூ.15 லட்சம் மதிப்பிலான லாரியை திருடி சென்ற ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:04 AM
பகிர்:

நாமக்கல்லில் ரூ.15 லட்சம் மதிப்பிலான லாரியை திருடி சென்ற ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் சந்தைபேட்டைபுதூரைச் சேர்ந்த
வர் பழனிவேல் (52). இவர், தனது சரக்கு லாரியை முதலைப்பட்டியில் உள்ள பட்டறையின் எதிரில் உள்ள காலி இடத்தில் நிறுத்தி இருந்தார். கடந்த 18-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு லாரியை பார்க்க சென்றபோது லாரி திருடுபோனது தெரியவந்தது.
 இதுகுறித்து அவர் நாமக்கல் நல்லிப்பாளையம் போலீஸில் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, லாரியை திருடிய நபரை தேடி வந்தனர். இதனிடையே பழனிவேலின் செல்லிடப்பேசி எண்ணிற்கு அவரது லாரி சேலம் மாவட்டம் தலைவாசல் சுங்கச்சாவடியை கடந்ததற்கான குறுஞ்செய்தி வந்தது. 
அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கைலாசம் மற்றும் போலீஸார் சனிக்கிழமை காலை ஆத்தூர்-சின்னசேலம் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருட்டு போன லாரி அந்த வழியாக வந்தது. உடனடியாக அந்த லாரியை மறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நாமக்கல் பெரியப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (56) லாரியை திருடி கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநரான அவர் லாரியை திருடி ராசிபுரம் மற்றும் மங்களபுரத்தைச் சேர்ந்த இடைத்தரகர்களான கண்ணன், ராமு மற்றும் ராஜ்குமார் ஆகியோரை வைத்து லாரியை விற்பனை செய்ய முயற்சி செய்திருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து ஓட்டுநர் செல்வராஜை கைது செய்த போலீஸார் திருட்டு போன ரூ. 15 லட்சம் மதிப்பிலான லாரியை மீட்டனர். இந்த வழக்கில் துரிதமாக  செயல்பட்டு திருட்டு போன லாரியை மீட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு பாராட்டினார். கைதான செல்வராஜ் கடந்த 2008ஆம் ஆண்டு நாமக்கல்லில் லாரி டயரை திருடி விற்ற வழக்கில் சிறை சென்றவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.