சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சி கூவமலை பழனியாண்டவர் கோயில் சேந்தமங்கலம் பெருமாள், ஈஸ்வரன் கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து சேந்தமங்கலம் எம்எல்ஏ சி. சந்திரசேகரன் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேளுக்குறிச்சி பழனியாண்டவர் கோயிலுக்கு ரூ. 65 லட்சமும் சேந்தமங்கலம் பெருமாள் கோயிலுக்கு ரூ. 75 லட்சமும் திருப்பணி செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனை சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், எம்எல்ஏ சி.சந்திரசேகரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது இணை ஆணையர் வரதராஜன் கூறியது:
பேளுக்குறிச்சி பழனியாண்டவர் கோயில் திருப்பணிக்கு ரூ.65 லட்சமும், சேந்தமங்கலம் பெருமாள் கோயிலுக்கு ரூ.75 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள புதிதாகக் குழு அமைக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.