தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கட்சி முகவர்கள் முன்னிலையில் கட்சி முகவர்கள் தேர்வு செய்த 5 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஆயிரம் வாக்குகள் மாதிரி வாக்குப் பதிவு செய்து சோதனை நடத்தப்பட்டது.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் 500 வாக்குகளுக்கு மேல் குறிப்பிட்ட ஒரே சின்னத்துக்கு வாக்குகள் பதிவாகின்றன என அரசியல் கட்சிகள் புகார் செய்ததைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவு இயந்திரங்களில், 5 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. திருச்செங்கோடு வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் 260 வாக்குச்சாவடிகள் உள்ளன . இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் முகவர்கள் தேர்வு செய்து கொடுத்த 13 வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஆயிரம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வாக்குகளை முகவர்கள் முன்னிலையில் எண்ணி சரிபார்க்கப்பட்டு அவர்களது ஒப்புதல் கோரப்பட்டது.
இதுகுறித்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ் கூறும் போது, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட சின்னத்துக்கு மட்டுமே வாக்குகள் பதிவாகின்றன என்று அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 5 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் முகவர்கள் தேர்வு செய்து கொடுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி ஆயிரம் வாக்குகள் பதிவு செய்து, அந்த வாக்குகள் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து அரசியல் கட்சியினரின் ஒப்புதல் பெறுவதே இதன் நோக்கம் என்று தெரிவித்தார். 260 வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும் 520 வாக்குப் பதிவு இயந்திரங்களில் 13 வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்வு செய்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இயங்குகிறது என அரசியல் கட்சியினரின் ஒப்புதல் பெறப்பட்டது.