குமாரபாளையம் அருகே குடும்பத் தகராறில் மகன் அரிவாளால் வெட்டியதில் தாய் உயிரிழந்தார். காயமடைந்த தந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குமாரபாளையத்தை அடுத்த பச்சாம்பாளையம், அல்லிநாயக்கன்பாளையம் அன்னை நகரில் வசித்து வருபவர் பெருமாள் (80). இவரது மனைவி செல்லம்மாள் (75). இவர்களின் மூத்த மகன் செல்லமுத்து (60). கூலித் தொழிலாளி. இவருக்கும், தந்தை, பெருமாளுக்கும் ஏற்கெனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பெருமாள் வசித்து வந்த வீட்டைத் தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என செல்லமுத்து நீண்ட நாள்களாக கேட்டு வந்துள்ளார்.
இதற்கு பெருமாள் மறுப்புத் தெரிவித்து வந்த நிலையில், புதன்கிழமை இப்பிரச்னை தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த செல்லமுத்து, தந்தை பெருமாளையும், தாய் செல்லம்மாளையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதில், படுகாயமடைந்த செல்லம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். கவலைக்கிடமான நிலையில் பெருமாள் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.